www.asiriyar.net

Monday 28 August 2017

ரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளில் ஏற்பாடு

தமிழக வங்கிகளில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டுகள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு பரிந்துரையின் படி புதிய ரூ.200 நோட்டுகள் வெளியிடப்படும் என்று மத்தியநிதி அமைச்சகம் கூறியிருந்தது. அந்தவகையில் ரூ.2,000 நோட்டை சிரமம் இன்றி பொதுமக்கள் மாற்றுவதற்காக புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு உள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டது.சென்னை ரிசர்வ் வங்கிக்கு இந்த புதிய ரூ.200 நோட்டுகள் கண்டெய்னர்கள் மூலம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு விட்டன. ஆனாலும் தொடர் விடுமுறை மற்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வங்கிகளுக்கு பிரித்து கொடுக்கப்படவில்லை. இதனால் சென்னை ரிசர்வ் வங்கியில் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இந்த புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் முதற்கட்டமாக பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் தமிழக வங்கிகளில் இன்று முதல் ரூ.200 புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட உள்ளன.தாங்கள் சார்ந்துள்ள வங்கி கிளைகளில் பணம் எடுக்க செல்லும்போது மட்டுமே இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வழங்கப்பட உள்ளது. அதுவும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே பெற முடியும். தனியாக யாரும் சென்று வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே விதிகள் தான் அடுத்து வினியோகிக்கப்பட உள்ள புதிய ரூ.50 நோட்டுக்கும் பொருந்தும்.“புதிய ரூ.200 நோட்டுகள் குறிப்பிட்ட சில வங்கி கிளைகளுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே ரிசர்வ் வங்கியில் இருந்து நாளை (இன்று) உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், ரூ.200 நோட்டு வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்படும். அனேகமாக நாளை (இன்று) காலை 11 மணி முதல்புதிய நோட்டுகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்”, என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment