www.asiriyar.net

Saturday 2 September 2017

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: தனுசு ராசி

பொறுமையால் புகழின் உச்சிக்கே செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய விடாமல் முடக்கிவைத்ததுடன்,


வீண்பழி, அவமானங்களையும் தந்த குரு பகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்குள் அமர்வதால் எதிலும் வெற்றிபெறுவீர்கள். தொட்ட காரியமெல்லாம் துளிர்க்கும். சோர்ந்திருந்த நீங்கள் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு வருமானம் உயரும். ஷேர் மூலம் பணம் வரும்.

பிரபலங்கள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருவரும் மனம்விட்டுப் பேசுவீர்கள். கலகம் ஏற்படுத்தியவர்களை ஓரங்கட்டுவீர்கள். சகோதரிக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருந்த கல்யாணம் இனி சிறப்பாக முடியும். உங்களை அலட்சியப்படுத்திய உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் புதிய தெம்பு பிறக்கும். சோர்வு, விரக்தி விலகும். கடினமான வேலையைக்கூட இனி எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள்.
வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களைத் தாக்கிப் பேசியவர்கள் இனிப் புகழ்வார்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோவில் விழாக்களில் முன்னுரிமை அளிக்கப்படும். உங்களின் 3-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் இருந்த கோப தாபங்களெல்லாம் நீங்கும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குரு, ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் திருமணத்தைச் சிறப்பாக முடிப்பீர்கள்.
இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். உங்களிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வெகுநாட்களாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குரு பகவான் செல்வதால் பூர்வீகச் சொத்தை அழகுபடுத்தி, விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வழக்கு சாதகமாகும். எதிர்பாராத பயணம் உண்டு. குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்கும் பொறுப்பு வரும்.
06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. இந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவி கிடைக்கும். நவீன ரக செல்போன் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளுக்கு நிலையான வேலைவாய்ப்பு உருவாகும். மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வார்கள்.
குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும். வீட்டை இடித்துப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். தினம்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பொருளாதார நிலையில் ஆசுவாசமான காலம் இது.
14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு பகவான் சென்று மறைவதால் அடுத்தடுத்த சுபச் செலவுகளும் வந்த வண்ணம் இருக்கும். வேலைச் சுமையால் படபடப் அதிகரிக்கும். முதல் கட்டத்திலேயே எந்த ஒரு காரியத்தையும் முடிக்க முடியாமல் வீண் அலைக்கழிப்புகள் உண்டாகும். தன்முனைப்போ குற்றவுணர்வோ இன்றி நிதானமாகச் செயல்பட்டால் முடிவில் வெற்றி நிச்சயம். குடும்பக் காரியமாக இருந்தாலும் பலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் கடமைகளைச் சரிவரச் செய்துவாருங்கள்.
07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்துவிட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பிள்ளைகள் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டாம்.
வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். வர வேண்டிய பாக்கிகளை நாசுக்காக வசூலியுங்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனித் தடையில்லாமல் கிடைக்கும். மூத்த அதிகாரியிடமிருந்து அலுவலக ரகசியங்களைத் தெரிந்துகொள்வீர்கள். வேலைச் சுமை குறையும். உங்களின் தனித் திறமையை அதிகப்படுத்திக்கொள்வீர்கள். உயர் தொழில்நுட்பம், நிர்வாகக் கல்விக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு.
இந்தக் குரு மாற்றம் மன உளைச்சல், தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுவிப்பதுடன், பணப்புழக்கத்தையும் நிம்மதியையும் தந்து சமூகத்தில் தலை நிமிர வைக்கும். ஞானமும் பக்குவமும் உயரும் காலம் இது.
பரிகாரம்:
பொள்ளாச்சியிலிருந்து 20கிலோமீட்டர் தொலைவில் உள்ள புரவிப்பாளையம் எனும் கிராமத்தில் ஜமீன்தாரின் அரண்மனை வளாகத்துக்குள் அமைந்துள்ள ஸ்ரீகோடி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு கார்த்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள்.

No comments:

Post a Comment