www.asiriyar.net

Saturday 2 September 2017

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: ரிஷப ராசி

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து கொஞ்சம் பணப் புழக்கத்தையும் ஓரளவு வசதி வாய்ப்புகளையும் தந்த குரு பகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார்.




         கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதிகம் போராட வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடல் நலத்தில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குரு பகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பேச்சில் ஒரு கம்பீரம் பிறக்கும். இழுபறியான வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும்.

வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடப்பார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருக்கப் பாருங்கள். கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீர்ந்து ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே வந்து நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை கிடைக்கும். டிரஸ்ட், சங்கம் தொடங்குவீர்கள்.
சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும். கவுரவப் பதவிகள் தேடி வரும். பணப் பற்றாக்குறையால் நின்றுபோன கட்டிட வேலைகள் முடியும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் நல்ல வரன் அமையும்.
கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். வெகுகாலமாகப் போக நினைத்தும் முடியாமலிருந்த குலதெய்வக் கோயிலுக்கு இப்பொழுது சென்று வருவீர்கள்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். நீண்ட காலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டாகும்.
06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் பிரச்சினைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கவிருப்பதால் உங்களது திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மைகளெல்லாம் வந்து போகும். போலியானவர்களைக் கண்டுபிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் வருட பிற்பகுதியில் புது முதலீடுகள் செய்யலாம். எவ்வளவு அள்ளித்தந்தாலும் வேலையாட்கள் நன்றியில்லாமல் இருக்கிறார்களே என உணர்ச்சிவசப்படுவீர்கள். தொழிலில் போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகச் சம்பளத்துடன் கூடிய பதவியுயர்வு உங்கள் இருக்கை தேடி வரும். என்றாலும் பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். ஆனால், மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.
இந்த குரு மாற்றம் முதல் முயற்சியில் உங்களை அலைக்கழித்தாலும் இரண்டாவது முயற்சியில் வெற்றி தரும்.
பரிகாரம்:
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீதுர்வாசர் கோயிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ள ஸ்ரீஅடிமுடி சித்தர் அவர்களின் ஜீவ சமாதிக்குப் பௌர்ணமி திதி நாளில் சென்று வணங்குங்கள். பச்சரிசி தானமாகக் கொடுங்கள். தடை நீங்கி வெற்றி கிட்டும்.

No comments:

Post a Comment