www.asiriyar.net

Thursday 7 September 2017

அரசு ஊழியர்கள் சங்கங்கள், 'டமார்' ஒரு தரப்பினர் இன்று முதல், 'ஸ்டிரைக்'

முதல்வர் பழனிசாமியின் பேச்சுக்கு பின், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, இரண்டாக உடைந்தது. ஒரு தரப்பினர், வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகினர்; மற்றொரு தரப்பினர், இன்று வேலை நிறுத்தத்தை துவங்குகின்றனர்.



அரசு ஊழியர்கள், சங்கங்கள், 'டமார்' , ஒரு தரப்பினர், இன்று முதல், 'ஸ்டிரைக்'

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தது.

இதையடுத்து, கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி நேற்று,
ஈரோட்டில் உள்ள, அரசு விருந்தினர் மாளிகையில், ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார்.

கால அவகாசம்

இதில், 'செப்., 30க்குள், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆய்வு செய்யும் நிபுணர் குழுவிடம், அறிக்கை பெறப்படும். பின், தாமதமின்றி ஊதிய உயர்வு அறிவிக்கப்படும். 'தாமதம் ஏற்பட்டால், இடைக்கால நிவாரணம்

அறிவிக்கப்படும். பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிபுணர் குழுவுக்கு, நவம்பர் வரை கால அவகாசம் உள்ளது. அதுவரை சங்கங்கள் காத்திருக்க வேண்டும்' என, முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், தங்களுக்குள் பேச்சு நடத்தினர். இதில், ஒருமித்த முடிவு எட்டாமல், கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முடிவில், கூட்டமைப்பே, இரண்டாக உடைந்து விட்டது.

ஒரு தரப்பினர்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வும், மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர்.'ஜாக்டோ' ஒருங்கிணைப்பாளர், இளங்கோவன், 'ஜியோ' ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர், போராட்டத்தில் இருந்து விலகி உள்ளனர். போராடு வோர் தரப்பில், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளராக, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர், மாயவன்; ஜியோ ஒருங்கிணைப்பாளராக, அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், பாலசுப்பிரமணியம் ஆகியோர், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


ஆர்ப்பாட்டம்

போராடுவோர் சார்பில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், ''திட்டமிட்டபடி, காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கும். நாளை, மாவட்ட தலைநகரங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.''சென்னையில், செப்., ௯ல், மறியல் நடத்தப்படும். வரும், ௧௦ம் தேதி, மீண்டும் கூடி, அடுத்த கட்ட நிலை குறித்து முடிவுசெய்வோம்,'' என்றார்.

போராட்டத்தில் இருந்து விலகியோர் சார்பில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர், இளங்கோவன் கூறுகையில், ''முதல்வரே முன் வந்து பேச்சு நடத்தியதால், அவரது வாக்குறுதிக்கு மதிப்பளித்து, போராட்டத்தை, அக்., 15 வரை தள்ளி வைத்துள்ளோம். ''இன்னொரு தரப்பினர், போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை,'' என்றார்.கூட்டமைப்பில் உள்ள பெரும்பாலான சங்கங்கள், போராட்டத்தில் இருந்து விலகி உள்ளதால், இன்று துவங்கும் வேலை நிறுத்த போராட்டம், பிசுபிசுக்கும் என்றே தெரிகிறது.


வருகை பதிவு விபரத்தை10:00 மணிக்குள் தர உத்தரவு


முதல்வர் நேற்று பேச்சு நடத்தியதை அடுத்து, இன்று முதல் நடக்க இருந்த, வேலை நிறுத்த போராட்டத்தை, ஜாக்டோ - ஜியோ அமைப்பு, தள்ளி வைத்துள்ளது. ஒரு தரப்பினர் இன்று,
போராட்டத்தை துவக்குவதாக அறிவித்து உள்ளனர். சில சங்கங்கள், 'அறிவித்தபடி போராட்டம் தொடரும்' என, அறிவித்துள்ளன.

அதைத் தொடர்ந்து, 'அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளில், இன்று காலை, 9:45 மணிக்கு, வருகைப் பதிவேட்டின் பதிவை நிறைவு செய்ய வேண்டும். காலை, 10:00 மணிக்குள், எத்தனை பேர் பணிக்கு வந்து உள்ளனர்; எத்தனை பேர் வரவில்லை என்ற விபரங்களை, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment