www.asiriyar.net

Saturday 2 September 2017

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: கும்ப ராசி

எப்போதும் நியாயத்தைப் பேசும் யதார்த்தவாதிகளே!
இதுவரை உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து மனப் போராட்டத்தையும் பணப் போராட்டத்தையும் கொடுத்துவந்த குரு பகவான் 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைவதால் புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள். இனி எதைத் தொட்டாலும் வெற்றியில் போய் முடியும்.



அடிக்கடி குடும்பத்தில் நிலவிவந்த வீண் விவாதங்கள், சண்டை சச்சரவுகள் எல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகளால் இனி வீடு களை கட்டும். வருங்காலத்தை மனதில் கொண்டு கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பணவரவு சரளமாக வருவதால் வங்கியிலிருந்த நகையை மீட்பீர்கள். நெடுநாள் கனவான வீடு, மனை வாங்கும் ஆசை நிறைவேறும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் துவண்டிருந்த உங்கள் முகம் பிரகாசிக்கும். பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.
குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குரு பகவான் செல்வதால் அறிவுப்பூர்வமாகவும் அனுபவப்பூர்வமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். பதவிகள் தேடி வரும். சொத்துப் பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு காண்பது நல்லது.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். வாயுக் கோளாறு, தலைசுற்றல், சிறுநீரகத் தொற்று வந்து செல்லும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். சிலர் உங்களைத் தவறான போக்குக்குத் தூண்டுவார்கள். முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். என்றாலும் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும்.

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் குடும்பத்தில் அமைதி குறையும். யாரும் தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை, தன்னை யாரும் மதிக்கவில்லை என்றெல்லாம் சில நேரங்களில் நினைப்பீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பழுதாகியிருந்த கடையை அழகாக்குவீர்கள். நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். தொல்லை கொடுத்த வேலையாட்களை மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையையும் தகுதியையும் மேலதிகாரி அங்கீகரிப்பார். உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இனித் தேடி வரும்.

இந்தக் குரு மாற்றம் வறுமை, வாட்டம், விரக்தியிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் நீண்டகால கனவுகளை நனவாக்குவதாக அமையும்.

பரிகாரம்:
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்குத் திசையில் மூசாக்கோட்டை ஆசிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதலையாட்டிச் சித்தரின் சமாதி பீடத்துக்கு உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சென்று வாருங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உதவுங்கள். எதிலும் வெற்றி கிடைக்கும்.

No comments:

Post a Comment