www.asiriyar.net

Saturday 2 September 2017

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: கன்னி ராசி

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், வாழ்த்துகளையும் வசவுகளையும் சமமாகப் பாவிப்பவர்கள்.


        இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து உங்களுக்கு வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட மன உளைச்சலையும் படபடப்பையும் தந்து, எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்த குரு பகவான் 02.09.2017 முதல் 02.10.2018 முடிய உங்கள் ராசிக்குத் தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். வீட்டில் பேச ஆரம்பித்தாலே பிரச்சினைகள் வெடித்ததே! இனி இதமாகப் பேசி சாதித்துக் காட்டுவீர்கள்.

எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதியுண்டாகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் மனைவி இனி ஒன்று சேருவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சோர்ந்த முகம் மலரும். வர வேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் உரசல் போக்கு, மனஸ்தாபங்கள் யாவும் நீங்கி, பாசமாகப் பேசுவார்கள். குரு பகவான் உங்களது ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள்.வீண் வதந்திகள், விமர்சனங்களிலிருந்து மீள்வீர்கள். போட்டியாளர்களுக்குப் பதிலடி கொடுப்பீர்கள். மருந்து, மாத்திரைக்கு என்று இனி அதிகம் செலவு செய்ய மாட்டீர்கள். ஆரோக்கியம் கூடும். குரு பகவான் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால் வருமோ வராதோ என்றிருந்த பணமெல்லாம் கைக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் நிம்மதியுண்டாகும். வெகு நாளாகத் திட்டமிட்ட வெளிநாட்டுப் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.
குரு பகவான் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். புது வேலை கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். சங்கம், டிரஸ்ட் போன்றவற்றிலிருந்து கவுரவப் பதவிகள் தேடி வரும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குரு பகவான் செல்வதால் சாலைகளைக் கவனமாகக் கடந்து செல்லுங்கள். சிறு சிறு விபத்துகள் நிகழக்கூடும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.
06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்கள் சிலரால் தர்ம சங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டி வரும்.
குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் கவுரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் வரக்கூடும். தாயாருடன் மனத்தாங்கல் வரும்.
14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால் குடும்பத்தினருடன் இணக்கமாகச் செல்லவும். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மறதியால் விலையுயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.
07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவதற்கான சந்தர்ப்பம் உருவாகும். மனைவிவழி உறவினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தில் சந்தை நிலவரமறிந்து புதிதாக முதலீடுகள் செய்வீர்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதாக வசூலாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் இனி கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனி பணிந்துபோவார். பதவியுயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பலருக்கும் குடும்பத்துடன் சேரும் வகையில் இடமாற்றம் கிடைக்கும்.
இந்தக் குரு மாற்றம் திக்குத்தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் கவுரவத்தையும் பணத்தையும் அள்ளித்தரும்.
பரிகாரம்:
புதுக்கோட்டை நகரில் புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜட்ஜ் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு சதயம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். முடிந்தால் கண் தானம் உறுதிமொழி எடுங்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும்.

No comments:

Post a Comment