www.asiriyar.net

Saturday 2 September 2017

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மீன ராசி

     கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காதவர்களே!
இதுவரை உங்கள் ராசியை நேருக்குநேர் பார்த்துக்கொண்டிருந்த குரு பகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சென்று மறைகிறார். 8-ல் நிற்கும் குருவால் எல்லா காரியங்களும் தட்டிக்கொண்டே போகுமே, தெளிவில்லாமல் முடிவெடுக்க நேரிடுமே, இருப்பதை எல்லாம் இழக்க வேண்டியது வருமே, என்று கலங்காதீர்கள். குரு 8-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள் குறையும். அன்னியோன்யம் அதிகரிக்கும்.


பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள். ஆனால், ஏதாவது பிரச்சினையில் சிக்கிக்கொள்வோமோ என்ற அச்சம் இருக்கும். திட்டமிட்ட பல வேலைகள் தாமதமாகப் போய் முடியும். சில விஷயங்களை அதிக செலவு செய்து முடிக்க வேண்டியது வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். வறட்டுக் கவுரவத்துக்காகத் தடபுடலாகச் செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. நள்ளிரவுப் பயணங்களைத் தவிர்க்கப் பாருங்கள். ஆனால், குரு பகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பேச்சில் இருந்த தடுமாற்றம் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வீண் பயம் விலகும்.

மனைவிவழி உறவினர்களால் இருந்து வந்த சங்கடங்கள் தீர்ந்து நல்லது நடக்கும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் அலைச்சல்,டென்ஷன் விலகும். அம்மாவுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். குரு பன்னிரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். முன்னோர்கள் விட்டுச் சென்ற நல்லவற்றைப் பாதுகாக்க முயல்வீர்கள். இந்த ஒரு வருடத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. வீண் பேச்சில் நேரத்தை வீணடிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.

செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குரு பகவான் செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவியால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள்-. வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.

கூடாப்பழக்கமுள்ளவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.
குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் தைரியமாகச் சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். என்றாலும் பண விஷயத்தில் ஏமாந்துவிட வேண்டாம். ஷேர் மூலமாகவும் பணம் வரும்.

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால் பிதுர்வழிச் சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அரசாங்க விஷயம் உடனே முடியும். தந்தையார் உறுதுணையாக இருப்பார். அவரது உடல் நிலையும் சீராகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.
07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள்.
வியாபாரத்தில் விளம்பர உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படியாக வரவழைப்பீர்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கூச்சல், குழப்பங்களெல்லாம் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களிடம் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம். புது வேலைக்கு மாறும்போது யோசித்து செயல்படுங்கள்.

இந்தக் குருப்பெயர்ச்சி முன்னெச்சரிக்கை உணர்வாலும், யதார்த்தமான பேச்சாலும் உங்களை வளர்ப்பதுடன் பணத்தின் அருமையையும் புரிய வைக்கும்.

பரிகாரம்:
பாண்டிச்சேரியில் அம்பலத்தாடையார் மடத்து வீதியில் உள்ள அம்பலத்தாடையார் மடத்தினுள் அருள்பாலிக்கும் ஸ்ரீநாகலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு ரோகிணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுங்கள். உங்களின் எதிர்ப்பார்ப்புகள்  தடையின்றி நிறைவேறும்.

No comments:

Post a Comment