www.asiriyar.net

Friday 13 October 2017

அனைத்து பள்ளியிலும் இணையதள சேவை சாத்தியமாகுமா அமைச்சரின் அறிவிப்பு?




கோவை : அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும் என்ற, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு, சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும், தலா மூன்று கம்ப்யூட்டர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 80 சதவீத கம்ப்யூட்டர்கள் பழுதாகியிருப்பதால், இ-வேஸ்ட்டாக மாற்றும் பணிகள் நடக்கின்றன. இப்பள்ளிகளுக்கு, அலுவலக பயன்பாட்டுக்கு கூட கம்ப்யூட்டர்கள் இல்லை. தொடக்கப் பள்ளிகளுக்கு, அரசால் இதுவரை கம்ப்யூட்டர்களே வினியோகிக்கப்படவில்லை. தன்னார்வ அமைப்புகளின் உதவியால், இவ்வசதி சில பள்ளிகளில் மட்டுமே ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.மலை கிராம பள்ளிகளுக்கு, லேண்ட்லைன் இணைப்பு இல்லாததால், தனியார் பிரவுசிங் சென்டர்களில் தான், கல்விசார் கோப்புகள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. எந்த மாவட்டத்திலும், அனைத்து பள்ளிகளுக்கும் முழுமையாக கம்ப்யூட்டர்கள் வினியோகிக்கப்படவில்லை.இந்நிலையில், 'இம்மாத இறுதிக்குள், அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் இணையதள சேவை வசதி ஏற்படுத்தி தரப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். நடைமுறையில் சாத்தியப்படாத இதுபோன்ற பல திட்டங்கள், வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே அறிவிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்படும் பல திட்டங்கள், சில பள்ளிகளோடு முடங்கிவிடுகின்றன. மாவட்டத்திற்கு தலா, 10 பள்ளிகளை தேர்வு செய்து, அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இது, கிராம, மலைப்பகுதி பள்ளி மாணவர்களுக்கு விரிவடையாததால், அனைத்து மாணவர்களும் பலனடைய முடிவதில்லை.'தற்போது, அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள சேவை ஏற்படுத்தி தரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அலுவலக பயன்பாட்டுக்கு, தரமான கம்ப்யூட்டர்கள் அளித்த பின், இவ்வசதியை ஏற்படுத்தி தந்தால் பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.

No comments:

Post a Comment