www.asiriyar.net

Tuesday 13 February 2018

96 சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு விருது




தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த 96 அரசுப் பள்ளிகளுக்கு சுழற்கேடயங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.


தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 45,122 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கல்விப் பணியில் முன்னேற்றம் காணும் வகையிலும் பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கவும் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட வாரியாகச் சிறந்த பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அரசின் சார்பில் சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2016}17}ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத் திறன்,கற்றல் கற்பித்தலில் புதிய உத்திகளைப் பயன்படுத்துதல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு முக்கியவத்துவம் தருதல், பன்முகத் திறன் வெளிப்பாடு, உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றில் சிறந்து விளங்கிய பள்ளிகளில் மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் மொத்தம் 96 பள்ளிகளுக்கு சுழற்கேடயங்களை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார். 

ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள்: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மொத்தம் 2,23,162 ஆசிரியர்களும், 37 லட்சத்து 80,506 மாணவர்களும் உள்ளனர். அவற்றில் 2016}17}ஆம் கல்வியாண்டில் 51 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

விடுப்பு எடுக்காமல் வருகை தந்த 20,734 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், தமிழ்நாடு பாடநூல்}கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக விரைவில் அச்சடித்து வழங்கப்படவுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். 

பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், இயக்குநர் ரெ.இளங்கோவன், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் ஜெகநாதன், எஸ்எஸ்ஏ இயக்குநர் நந்தகுமார், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment