www.asiriyar.net

Thursday 15 February 2018

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனுவுக்கு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சேர்ந்த எம்.இளமதி சென்னை உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஜூலை 28 இல் வெளியானது. தொடர்ந்து, செப்டம்பர் 16 இல் தேர்வு நடைபெற்ற நிலையில், விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, நவம்பரில் சுயவிவரங்கள் பெறப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில், விடைத்தாள்களில் முறைகேடுகள் செய்யப்பட்டதாகக் கூறி, அந்த தேர்வை ரத்து செய்வதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அந்தப் பணிகளுக்கான மறுதேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 லட்சத்து 33 ஆயிரத்து 567 பேர் தேர்வெழுதிய நிலையில், 200 பேரின் விடைத்தாள்களிலேயே முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதுவும் தேர்வு எழுதியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. ஆகவே, தவறிழைத்த 200 பேருக்காக தேர்வெழுதிய அனைவரையும் தண்டிப்பது முறையல்ல. எனவே பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக செப்டம்பர் 16இல் நடைபெற்ற தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கும், மறுதேர்விற்கான அறிவிப்பை வெளியிடவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக உயர்கல்வித்துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பிப்ரவரி 22 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment