www.asiriyar.net

Wednesday 7 March 2018

கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல்: 12-இல் அறிவிப்பு

தமிழகத்தில் 15 அரசுத் துறைகளின் கீழ் வரும் 18,775சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 12-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களின் 5 ஆண்டு பதவிக் காலம் ஏப்ரலில் முடிவடைய உள்ளது.

இதையடுத்து, கூட்டுறவு, ஆவின், மீன்வளம், கைத்தறி-துணிநூல், தொழில்வணிகம் என 15 அரசுத் துறைகளின் கீழ் 18 ஆயிரத்து 775 சங்கங்கள் உள்ளன. அதிலுள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளது. தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், மாநில சங்கங்கள்என மூன்றடுக்கு முறையில் கூட்டுறவுச் சங்கங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருவதால் அவற்றுக்கான தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.அதிக எண்ணிக்கையில் உள்ள 18, 435 தொடக்க கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் முதல் கட்டத்தில் நான்கு நிலைகளில் நடத்தப்பட உள்ளது.

 மாவட்டத் தேர்தல் அலுவலர்களால் முதல் நிலைக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 12-இல் வெளியிடப்படும். அரசுத் துறைகளின் தலைவர்கள் மாநில தேர்தல் அலுவலர்களாகவும், அந்தத் துறைகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர்கள், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மு.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment