www.asiriyar.net

Thursday 8 March 2018

சி.பி.எஸ்.இ., வினாத்தாளை 'லீக்' செய்ய நூதன முயற்சி

சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு வினாத்தாளை, 'லீக்' செய்ய, சிலர் நுாதன முயற்சி செய்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான,

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 5ல், பொதுத் தேர்வு துவங்கி உள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சிலவற்றுக்கு, ஒரு கும்பல், 'இ - மெயில்' அனுப்பி உள்ளது. சி.பி.எஸ்.இ., அதிகாரபூர்வ மெயில் முகவரி போன்று, போலி இ - மெயில் முகவரி தயாரித்து, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.அதில், 'தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாளை, உடனடியாக, இந்த, இ - மெயில் முகவரிக்கு அனுப்புங்கள்; அவை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டவையா என, ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.'சில பள்ளிகளுக்கு, வினாத்தாள் மாறி உள்ளதால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

இதை பார்த்து, வினாத்தாளை, 'ஸ்கேன்' செய்து, அந்த மெயில் முகவரிக்கு அனுப்ப, சில பள்ளிகள் தயாராகின.ஆனாலும், திடீரென சந்தேகம் ஏற்பட்டதால், அது பற்றி, சி.பி.எஸ்.இ., மண்டல மற்றும் தலைமை அலுவலகங்களில் விபரம் கேட்டுள்ளனர். அப்போது தான், அந்த மெயில் போலியாக வந்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, சி.பி.எஸ்.இ., தேர்வுத் துறையிடம், சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, போலீசில் புகார் செய்ததுடன், துறை ரீதியான விசாரணையையும், சி.பி.எஸ்.இ., துவங்கி உள்ளது.

இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையில், 'வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை, எந்த இ - மெயில் முகவரிக்கும் அனுப்பக் கூடாது. சந்தேகத்திற்கு இடமானபோன், மெயில் மற்றும் ஆட்கள் வந்தால், உடனடியாக தகவல் தர வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment