www.asiriyar.net

Thursday 31 August 2017

தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககமும் இணைந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் 413 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்மாநில அளவிலான கருத்தரங்கை நேற்று நடத்தின.

இந்த 2 நாள் கருத்தரங்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.இதில் கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தக் கருத்தரங்கைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கருத்தரங்கு செப்டம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் கட்ட கருத்தரங்கை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்து பேசியது:தமிழகத்தில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் வகுப்பறைகளிலேயே உதவி கல்வி அலுவலர்களுக்கு அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கல்வித்துறை அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வெளிப்படையாக விரைவில் நடத்தப்படும். மேலும் கல்வி அலுவலர்களுக்குபுதிய வாகனங்கள் வழங்கப்படும்.மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோர்கள் சுலபமாக தெரிந்துகொள்ள ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தப் பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.பின் செய்தியாளர்களிடம், “பள்ளிகளில் யோகாபயிற்சி வழங்குவது தொடர்பாக, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாருக்கு வழங்கும் நிதி ஆயோக் பரிந்துரைதொடர்பான எந்த கடிதமும் வரவில்லை. அவ்வாறு கடிதம் வந்தால், முதல்வர், அமைச்சர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment