www.asiriyar.net

Tuesday 29 August 2017

எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.


ஒரு மாணவரின் பெயர் உட்பட முழு விபரம் சேகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் கல்வித்துறையில் ’எமிஸ்’ (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இப்பணி நுாறு சதவீதம் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.

குறிப்பாக, பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள மாணவர்கள் பெயர்களை இணைப்பது, கல்வியாண்டு இடையிலேயே வேறு பள்ளி அல்லது வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கையாவது, இடைநிற்றல் மாணவரை கண்டறிவது, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சில குளறுபடிகள் என பல காரணங்களால், நுாறு சதவீதத்தை எட்ட முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர்.

மேலும் ’எமிஸ்’ பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் பழமையானதாகவும், அதிக விபரங்களை ஏற்று தக்க வைக்கும் திறன் குறைவானதாகவும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. 

இதனால் சிறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், சென்னை தலைமை தொகுப்பு அலுவலகத்தில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. 

இதுபோன்ற காரணங்களால் போதிய தகவல்களை தக்க வைக்கும் வகையிலான நவீன மென்பொருள் உருவாக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து செயலராக இருந்த உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கையால், புதிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பத்து ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்த மென்பொருள் மூலம் ’எமிஸ்’ பணிகளை முடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கையை விட ’எமிஸ்’ எண்கள் எண்ணிக்கை அதிகரித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து உதயசந்திரன் எடுத்த நடவடிக்கையால், தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே திருத்தம் செய்யும் வசதியும் ஏற்படும். இதன்மூலம் நுாறு சதவீதம் ’எமிஸ்’ பணிகளை எட்ட முடியும். மாணவர்கள் ’ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதும் எளிதாகும், என்றார்.

No comments:

Post a Comment