www.asiriyar.net

Monday 11 September 2017

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 மெயின் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது?- ஓராண்டுக்கு மேலானதால் ஏமாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வை நடத்தி முடித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வு எழுதிய 9,680 பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

1,241 காலியிடங்கள்


துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவும் வகையில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 30.4.2015 அன்று வெளியிட்டது.பட்டப் படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட குரூப்-2 தேர்வு முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத்தேர்வு கடந்த 27.6.2016 அன்று நடந்தது. இத்தேர்வை8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் 20.5.2017 அன்று வெளியிடப்பட்டன. முதல்நிலைத்தேர்வு முடிவை வெளியிடவே கிட்டதட்ட ஓராண்டு ஆகிவிட்டது. முதல்நிலைத் தேர்வில் 9,680 பேர் தேர்ச்சிபெற்றனர். அவர்களுக்கு கடந்த 21.8.2016 அன்று மெயின் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் விரிவாக விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

இரண்டரை ஆண்டுகள்

மெயின் தேர்வு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வர்கள் கடும் ஏமாற்றத்துக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். காரணம், தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இனிமேல், தேர்வு முடிவுகள் வெளியிட்டு அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, கலந்தாய்வு என இவ்வளவு நடைமுறைகளையும் முடிக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ? என்றஆதங்கம்தான். தேர்வு முடிவுகள் குறித்து தெரிந்துகொள்ள தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு நேரில் சென்றாலோ அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டாலோ, சொல்லப்படும் ஒரே பதில் "விரைவில் வெளியிடப்படும்" என்பதுதான். இந்த பதிலைத்தான் கடந்த 6 மாதங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று தேர்வர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

பழைய நடைமுறை

முன்பெல்லாம் குரூப்-2 தேர்வுக்கு ஒரே தேர்வுதான். கடந்த சில ஆண்டுகளாகத்தான் மெயின் தேர்வு என்ற புதிய தேர்வையும் சேர்த்தார்கள். மெயி்ன் தேர்வை நடத்துவதால்டிஎன்பிஎஸ்சி-க்கும் பணிச்சுமை, தேர்வர்களுக்கும் பணிச்சுமை. எனவே, முன்பு இருந்து வந்ததைப் போல, குரூப்-2 தேர்வுக்கும் ஒரே தேர்வும் அதைத்தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்திவிடலாம் என்பது பல தேர்வர்களின் விருப்பமாக இருக்கிறது.ஒருவேளை தேர்வர்களின் மொழித்திறனை ஆய்வுசெய்ய நினைத்தால், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) போன்று காலையில் முதல்நிலைத் தேர்வும், அன்றைய தினம் மதியமே கட்டுரைத்தாள் தேர்வையும் நடத்திவிடலாம். முதல்நிலைத் தேர்வில் குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண் பெறும் தேர்வர்களின் கட்டுரைத்தாள் தேர்வு விடைத்தாள்களை மட்டும் மதிப்பீடு செய்யலாம். இதனால், காலவிரயம் மிச்சமாகும் என்று தேர்வர்கள் யோசனை தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment