www.asiriyar.net

Wednesday 13 September 2017

2 லட்சம் ஆசிரியர்களுக்கு ’மெமோ!’

’ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, ’மெமோ’ கொடுக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ’ஜாக்டோ - ஜியோ’ சார் பில், செப்., 7 முதல், கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

இதனால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு செல்லவில்லை; அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பணிகள் முடங்கி உள்ளன. பல பள்ளிகளில், காலாண்டு தேர்வை நடத்தவும், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் பட்டியலை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்துள்ளது. 

இதில், மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் வரை பணிக்கு வராதது தெரிய வந்துள்ளது. நிலைமை மோசமாகாமல் தடுக்க, போராட்டத்தில் பங்கேற்று உள்ள ஆசிரியர்களுக்கு, தனித்தனியாக விளக்கம் கேட்டு, ’மெமோ’ கொடுக்கும்படி, மாவட்ட முதன்மை மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. 

ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வராததால், அவர்களின் வீட்டிற்கே, தலைமை ஆசிரியர்கள் வழியாக, ’மெமோ’ அனுப்பப்பட உள்ளது. அதில், ’பணிக்கு வராமலும், விடுமுறைகடிதமும் இல்லாமலும் வேலை நிறுத்தத்திற்கு சென்றதால், தங்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என, விளக்கம் கோரப்படுகிறது. ஆசிரியர்கள் தரும் விளக்கத்தை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

’நீட்’ குறித்து பேச தடை

’ஜாக்டோ - ஜியோ’ சங்கநிர்வாகிகள், பள்ளி மாணவர்களிடையே, ’நீட்’ தேர்வுக்கு எதிராக, பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, ’நீட் தேர்வு குறித்து விமர்சனம் செய்யவும், இது தொடர்பாக, பள்ளி பிரார்த்தனை கூட்டம் மற்றும் வகுப்புகளில் உரையாற்றவும், ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 

No comments:

Post a Comment