www.asiriyar.net

Monday 18 September 2017

69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாகர்கோவிலைச் சேர்ந்த திருமால் மகள் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 50% இட ஒதுக்கீட்டை பின்பற்றி அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நீட் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்று 1,138-வது இடத்தில் தேர்வு பெற்றுள்ள தமக்கு மருத்துவ சேர்க்கைக்கான தகுதி பட்டியலில் 50% வருவதாகவும், தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டினால் தன்னுடைய வாய்ப்பு பறிபோனதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சிவபாலமுருகன், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தினார்.

இதை ஏற்று வரும் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மருத்துவ கலந்தாய்வு முடிந்து விட்டதாக கூறிய உச்சநீதிமன்றம், மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு கூடுதல் அவகாசம் தர முடியாது என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment