www.asiriyar.net

Sunday 10 September 2017

இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு... திட்டம்? பெண்கள் ஓட்டுகளை அள்ள பா.ஜ., அதிரடி வியூகம்

மறைந்த பிரதமர், இந்திராவுக்கு பின், பெண் ராணுவ அமைச்சராக, நிர்மலா சீதாராமனை நியமித்துபரபரப்பை ஏற்படுத்திய, பிரதமர் மோடி, அடுத்தகட்டமாக, பார்லி., மற்றும் சட்டசபை தேர்தல்களில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளார். 

இதன் மூலம், பெண்களின் ஓட்டுகளை ஈர்க்க, பா.ஜ., அதிரடி வியூகம் வகுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை, சமீபத்தில் விரிவு படுத்தப்பட்ட போது, ராணுவ அமைச்சராக, தமிழகத்தைபூர்வீகமாக உடைய, நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.இதன் மூலம், மறைந்த பிரதமர், இந்திராவுக்கு பின், ராணுவத் துறை பொறுப்பேற்கும் பெண் என்ற பெருமையை, அவர் பெற்றுள்ளார். ராணுவ அமைச்சராக, நிர்மலா சீதாராமனை தேர்வு செய்த, பிரதமர் மோடிக்கு, பெண்களிடம் இருந்து, பாராட்டு குவிகிறது.

'இது, பிரதமரின் தைரியமான நடவடிக்கை' என, ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன.இதனால், பெண்கள் ஓட்டுகளை கவரும், அடுத்த அதிரடி வியூகத்தில், பிரதமர் மோடி இறங்கி உள்ளார். அதன்படி, பார்லி., மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில், பெண்களுக்கு,33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க, மோடி திட்டமிட்டு உள்ளார்.

நீண்ட காலமாக, பார்லிமென்டில்
நிறைவேற்றப்படாமல் உள்ள, இந்த மசோதாவை நிறைவேற்றுவதால், பெண்களின்ஓட்டுகளை ஈர்க்க முடியும் என, பா.ஜ., கருதுகிறது.

லோக்சபாவில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருப்பதால், அதை, எளிதில் நிறைவேற்ற முடியும்; ராஜ்யசபாவில், மாநில கட்சிகளின் ஆதரவுடன், மசோதாவை நிறைவேற்றி விடலாம் என, பா.ஜ., திட்டமிடுகிறது. விரைவில் கூடவுள்ள, பார்லி., குளிர்கால கூட்டத் தொடரில்,இதற்கான நடவடிக்கை துவங்கும் என, தெரிகிறது.

பா.ஜ., தேர்தல் அறிக்கை

பா.ஜ., 2014 பார்லி., தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதவை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தது. எனவே, தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தும்வகையில், இந்த மசோதாவை நிறைவேற்ற, அக்கட்சி திட்டமிடுகிறது.

பெண்களுக்கு முக்கியத்துவம்

பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய, பா.ஜ., அரசு, துவக்கம் முதலே, பெண்கள் நல திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அக்கட்சி ஆளும் மாநிலங்களிலும், பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், தேர்தலில், பெண்களின் ஓட்டுகளை கணிசமாக ஈர்க்க, பா.ஜ., நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆதரவும், எதிர்ப்பும்

பா.ஜ., - காங்., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., மற்றும் மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சிகள், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதே போல், முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி,லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும், மசோதாவை எதிர்க்கின்றன.

87வது இடம்

ஆண் - பெண் சமநிலை பட்டியலில், இந்தியா, 87வது இடத்தில் இருப்பதாக, சுவிட்சர்லாந்து நாட்டின், பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. லோக்சபா, எம்.பி.,க்களில், 12.5 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்; தொழிலாளர்களில், 28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்.

காலாவதியான மசோதா

பார்லி.,மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, 1996ல், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தேவகவுடா, பிரதமராக இருந்த போது கொண்டு வர பட்டது. எனினும், 2008ல், இந்த மசோதா மாற்றி அமைக்கப்பட்டது; 2009ல், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

எனினும், லோக்சபாவில் நிறைவேற்றபட வில்லை. இதனால், மசோதா காலாவதியாகி விட்டது. எனவே, புதிய மசோதாவை, இரு சபைகளிலும் மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். 

No comments:

Post a Comment