www.asiriyar.net

Tuesday 19 September 2017

முன் அறிவிப்பின்றி காலாண்டு தேர்வு : தொடக்க பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி

அரசு தொடக்கப் பள்ளிகளில், முன் அறிவிப்பின்றி, திடீரென, காலாண்டு தேர்வு நேற்று துவங்கியதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகினர். தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, செப்., 11ல், காலாண்டு தேர்வு துவங்கியது. 22ம் தேதியுடன் தேர்வு முடிந்து, 23 முதல், விடுமுறை விடப்படுகிறது.

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள், செப்., 7 முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டதால், 1 - 8ம் வகுப்பு வரை, காலாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது; தேர்வு தேதியும் அறிவிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து, செப்., 15ல், போராட்டம் தற்காலிகமாக, 'வாபஸ்' பெறப்பட்டு, ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி, பாடங்களை எடுக்க துவங்கினர்.

காலாண்டு தேர்வுக்கான, பாடங்களை முடிக்கும் முன், தேர்வை நடத்த, தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதனால், எந்த முன் அறிவிப்புமின்றி, 1 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்கி உள்ளது. இதனால், மாணவர்கள் தேர்வு எழுத அவதிப்பட்டனர். சில மாவட்டங்களில் மட்டும், 'முன்கூட்டியே செப்., 15ல் தேர்வு' என, அறிவித்தனர். மற்ற பள்ளிகளில், நேற்று தான், ஆசிரியர்களுக்கே அறிவிப்பு கிடைத்தது. 

பாடங்கள் பாக்கி இருக்கும் நிலையிலும், முன் அறிவிப்பின்றி தேர்வு நடத்துவதாலும், ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள், மேலும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment