www.asiriyar.net

Wednesday 6 September 2017

ஆசிரியர், ஊழியர்கள் நாளை முதல், 'ஸ்டிரைக்' : பள்ளிகள், அலுவலகங்கள் முடங்கும் அபாயம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது. இதனால், ௩௦ ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உருவாக்கி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிடக்கோரி, தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், அறிவித்தபடி போராட்டம் துவங்குவது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலருமான, பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்ற, தமிழகத்திற்கு மட்டும் சாதகமான நிலை உள்ளது. ஏனென்றால், தமிழகம் மட்டுமே, இந்த திட்டத்தில் வசூலித்த பங்களிப்பு நிதியை, இன்னும் மத்திய அரசிடம் செலுத்தவில்லை. அதனால், எப்போது வேண்டுமானாலும், தமிழக அரசு சுதந்திரமான முடிவு எடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம்.
இதற்காக, இரண்டு முறை நிபுணர் குழு அமைத்தும், இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் கருத்து கேட்ட பிறகும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்யாமல், நிபுணர் குழு தாமதம் செய்கிறது. 
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வை அறிவிப்பதில் தாமதம் செய்யக்கூடாது. ஊதிய உயர்வு அமலாகும் தேதியை, அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை, போராட்டத்தை வாபஸ் பெற வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஆசிரியர்களின் போராட்டத்தால், நாளை முதல், 30 ஆயிரம் அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்தாமல், ௭௫ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதிப்பதால், வருவாய் துறை உட்பட அரசுத்துறை அலுவலகங்களில், நிர்வாக பணிகள் மொத்தமாக முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி இன்று பேச்சு : அரசியல் ரீதியாக, தமிழக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ள நிலையில், ஜாக்டோ - ஜியோ போராட்டம் மேலும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை சமாளிக்கும் வகையில், கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த, முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.இதற்காக, ஈரோட்டில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவினரை சந்தித்து பேச, அழைப்பு விடுத்துள்ளார். கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர், ஈரோடு சென்று இன்று காலை, 10 மணிக்கு, முதல்வரை சந்தித்து பேசுகின்றனர். இதில், உடன்பாடு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment