www.asiriyar.net

Thursday 14 September 2017

புதிய பாடத்திட்டம் நாளை முதல் ஆய்வு

தமிழக பள்ளிக்கல்வியில், புதிய பாடத்திட்டம் குறித்த வரைவு அறிக்கை தயாராகி உள்ளது. நாளை முதல், கல்வியாளர் குழு மூலம், ஆய்வு பணிகள் துவங்க உள்ளன.

பிளஸ் 2முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர, பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. மருத்துவத்திற்கும், இந்தாண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகி விட்டது. தமிழக மாணவர்கள், 'நீட்' தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளிலும், மற்ற மாநில மாணவர்களுக்கு இணையாக, தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, 14 ஆண்டுகளுக்கு பின், தமிழக பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. பாடத்திட்டத்துக்கான பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில், கல்வியாளர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், கருத்தறியும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இவற்றை தொகுத்து, பாடத்திட்டத்துக்கு முந்தைய கலைத்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம், 70 பக்க கலை திட்ட வரைவு அறிக்கையை, கல்வியாளர்கள் குழு, நாளை முதல் ஆய்வு செய்ய உள்ளது. அதன்பின், இணையதளத்தில், மக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும். பின், வரைவு அறிக்கை அடிப்படையில், பாட வாரியாக, வகுப்பு வாரியாக பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment