www.asiriyar.net

Saturday 9 September 2017

TET தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய குழு அமைத்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து சமரசம் பேசி வருகிறோம். இது தொடர்பாக குழு அமைத்து பரிசீலனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது. கல்வித்துறையினர் செயல்பாடுகளை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கொள்கையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. அதே வேளையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள எந்த ஒரு பொதுத்தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளும்வகையில், இம்மாதம் இறுதிக்குள் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். இதற்காக, சென்னை தலைமையிடமாக கொண்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை ரூ.432 கோடி மதிப்பில் கணினி மையமாக மாற்றப்படும். முதுநிலை ஆசிரியர்கள் 3336 பேரும், 748 கணினி ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடத்தி வருவது குறித்து கேட்டதற்கு, இதுபோன்ற நிலைமைகள் வருகிற திங்கள்கிழமைக்கு மேல் இருக்காது என்றார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதில் வேறுபட்டகருத்துகள் உள்ளன. 2013-14-ம் ஆண்டில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தற்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மதிப்பெண்களில் வித்தியாசம் உள்ளது. அப்போது 70 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றாலே, வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது, 85 முதல் 95 சதவீதம் பெறுகிறார்கள். வெயிட்டேஜ் என்கிற நிலை இருக்கிறது. அவர்களுடன் சமரசம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒத்துழைப்பு தந்தால், பழைய பாடத்தைப் படித்துவிட்டு கல்வியாளர்களாக இருக்கின்றவர்களின் எதிர்காலம் இல்லாத நிலையை மாற்றுவதற்கு ஒருகுழுவை அமைத்து, அந்த குழுவின் மூலம் பரிசீலனை செய்து இவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment