www.asiriyar.net

Friday 13 October 2017

ஊதிய உயர்வு அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

ஊதிய உயர்வு அறிவிப்பில் உள்ள சாதக பாதகங்களை பற்றி விவாதிக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று கூடுகின்றனர்.  இந்த கூட்டத்துக்கு பிறகு அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்க உள்ளனர். 

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வு  ஊதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது, ஊதிய முரண்பாடுகளை களைதல், தொகுப்பு  ஊதியம், பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்குதல் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் அரசு மற்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து நீதிமன்றம்  விசாரித்தது. அப்போது, அக்டோபர் 23ம் தேதிக்குள் அரசு உரிய பதில் தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே,  நேற்று முன்தினம், ஊதியத்தை உயர்த்தி அரசு அறிவித்தது. இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியதாவது: 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். அதற்காக ஒரு குழுவை அரசு  அமைத்தது. அந்த குழு முன்பு தெரிவித்த கருத்தால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கேட்டோம். ஆனால் நேற்று அரசு  அறிவிப்பில் ஊதிய  முரண்பாடுகள் களையவில்லை. 

இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரையில்  ஏற்கெனவே ரூ.11 ஆயிரம் இழப்பில் உள்ளனர். இப்போது அரசு அறிவித்ததில் ரூ.23 ஆயிரம் இழப்பு  ஏற்பட்டுள்ளது. அதாவது 2012ல் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.4200 அடிப்படை சம்பளத்தை மாற்றி  அமைப்பதன் மூலம் ஊதிய முரண்பாடுகளை களைந்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் சமநிலை ஏற்பட்டு இருக்கும். இது போன்ற பாதிப்புகளை  நீதிமன்றத்தில் எடுத்து சொல்வோம்.  இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.5200, தர ஊதியம் ரூ.2800, டிஏ ரூ.10880, எச்ஆர்ஏ 608,  சிசிஏ 180, எம்ஏ 100 இவை எல்லாம் சேர்த்தால் இடைநிலை ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் ரூ.19768. ஆனால் இப்போது ரூ.20600 என்று  நிர்ணயித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

இதில் தர ஊதியம், டிஏ, எச்ஆர்ஏ ஆகியவை சேர்க்கப்படவில்லை. இப்போது அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் அடுத்த 10 ஆண்டு வரை தொடரும்.  அதுவரை ஏற்படும் சம்பள இழப்பு என்பது பெரிய அளவில் இருக்கும். ஊதிய முரண்களை களைய வேண்டும் என்பதில் ரூ.5200 என்பதை ரூ.9300  என்று மாற்ற வேண்டும் என்று கேட்டோம். தர ஊதியமும் ரூ.4200 என்று கேட்டோம். அதை நிர்ணயித்து இருக்க வேண்டும். அப்படி  செய்திருந்தால்தான் ஊதிய முரண் களையப்பட்டதாக பொருள். மேலும் ஓய்வு பெறுவோருக்கு பென்ஷன் இல்லை. 21 மாத நிலுவைப் பணம்  கிடைக்கவில்லை. ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2.25 லட்சம் வரை ஊதிய உயர்வு என்று கூறிவிட்டு 12 லட்சம் பேரின் 21 மாத நிலுவைத் தொகையை   அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. 

அடிப்படை சம்பளமும் போய்விட்டது, நிலுவைத் தொகையும் போய்விட்டது. அதேபோல முதுநிலை பட்டதாரிகளுக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.  இது தவிர 1.6.2009க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் பெற்று வரும் சம்பளத்தில் தற்போது ரூ.10 ஆயிரம் வரை குறைய வாய்ப்புள்ளது.  அதனால் அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வு குறித்து ஜாக்டோ-ஜியோ மீண்டும்கூடி இன்று விவாதிக்க உள்ளது. அதற்கு பிறகு தான் அடுத்த கட்ட  முடிவு குறி்த்து அறிவிப்போம். 

No comments:

Post a Comment