www.asiriyar.net

Monday 2 October 2017

துவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா மோசம்!... மாணவர் எதிர்காலம் பாதிக்கும் என உலக வங்கி எச்சரிக்கை

'பாடங்களை புரிந்து கொள்ளாத பள்ளிப் படிப்புகள் வீண். இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், துவக்கக் கல்வி முறை மிகவும் மோசமாக உள்ளது; இது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்' என, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.


கல்வியின் மூலம் கற்றுக் கொள்ளுதல் குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்வியின் உண்மையான நோக்கம், மாணவர் கள் அதை படித்து புரிந்து, தங்களுடைய திறமைகளை, அறிவை வளர்த்துக் கொள்வது தான். 

துவக்க நிலை கல்வியில், இவ்வாறு புரிந்து படிக்காத மாணவர்கள், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பை, வருவாயை இழக்கின்றனர். புரியாமல், கற்காமல் படிக்கும் துவக்கப்பள்ளி படிப்பு, வீண். அவ்வாறு அளிக்கப்படும் கல்வி முறை, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும்.

புரிந்து கொள்ள முடியாமல் படிக்கும் ,

மாணவர்களால், எதிர்காலத்தில், சர்வதேச போட்டிகளை சமாளிக்க முடியவில்லை.இதனால், தங்கள் நாட்டிலேயே சமூகத்தில் முன்னேற முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்தப் பிரச்னை மிகவும் அதிகமாக உள்ளது.

ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை படிக்க முடியாத, இரண்டாம் வகுப்பு மாணவர்கள் உள்ள நாடுகளில், மேற்கு ஆப்பிரிக்க நாடான, மலாவிக்கு அடுத்தாக, இரண்டாவது இடத்தில், இந்தியா உள்ளது.இரண்டு இலக்க கழித்தல் கூட செய்ய முடியாத அளவுக்கு இரண்டாம் வகுப்பு மாணவர்கள் உள்ள, ஏழு மோசமான நாடுகளில்இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் கிராமப் பகுதிகளில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவர்களில், பெரும்பாலோர், 46ல், 17ஐ கழித்து விடை கண்டறிய முடியாதவர்களாக உள்ளனர். இவர்கள்,5-ம் வகுப்புக்கு சென்றாலும், இதே பிரச்னை அவர்களுக்கு உள்ளது.கற்காமல், புரிந்து கொள்ளாமல் உள்ள பள்ளி கல்வி திட்டத்தால், வறுமையை ஒழிக்க முடியாது. அது, சமூக நீதியை மறுப்பதாகும்; மேலும், அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியாது. இதனால், சமூகத்தில் உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது.இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.


தீர்வு என்ன?


மாணவர்களின் கற்கும் திறனை வளர்ப்பது குறித்து, உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சோதனை முறையில் ஆந்திராவில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, மொழிப் பாடங்கள் 

மற்றும் கணிதப் பாடத்தை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தும் ஆசிரியர்களுக்கு, பரிசுதிட்டம் அறிவிக்க பட்டது. அதன்பின், மொழி மற்றும் கணிதப் பாடங்களைத் தவிர, சமூக அறிவியல், அறிவியல் போன்ற பாடங்களிலும் மாணவர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.

பள்ளிக் கல்வியில், மொழிப் பாடங்களும், கணிதமும் தான், மிக முக்கியம். அதை சிறப்பாக கற்பித்தால், மற்ற பாடங்களை மாணவர்கள் சுலபமாக கற்றுக் கொள்வர். குஜராத்தில், வழக்கமான வகுப்பறை பாட திட்டங்களுடன், கம்ப்யூட்டர் மூலமும் அந்த பாடதிட்டங்கள் மாணவர்களுக்கு கற்பிக்க பட்டது. அதன் மூலம், மாணவர்களின் செயல்பாடு பலமடங்கு உயர்ந்தது.

மாணவர்கள், பாடங்களை கற்கும் வகையிலும், புரிந்து கொண்டு, அதை பயன்படுத்தக் கூடியவர்களாக உயரும் வகையிலும், அரசின் கல்வி கொள்கை இருக்க வேண்டும். அனை வருக்கும் கல்வி என்பதுடன், அனைவருக்கும் புரியும்படியான, கற்கும் வகையிலான கல்வியே, இந்தியா போன்ற வளரும் நாடு களுக்கு தேவை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புரிந்து படிப்பது, மாணவர்களுக்கு தார்மீக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பலன் அளிக்க கூடியது. கல்வியை சிறந்த முறையில் அளிக்கும்போது, எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு, நல்ல வருவாய், சுகாதாரம், வறுமையில்லா வாழ்க்கையை உறுதி செய்ய முடியும். மேலும் மிகச் சிறந்த குடிமகன்கள் உருவாவதையும், நல்ல சமூகத்தையும் உறுதி செய்ய முடியும்.

- ஜிம் யாங் கிம், தலைவர், உலக வங்கி

No comments:

Post a Comment