www.asiriyar.net

Monday 18 December 2017

பணி நியமனம் வழங்க நடவடிக்கை தாமதம்:இடைநிலை ஆசிரியராக தேர்வானவர்கள் வேதனை

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிநியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில், ஏப்., மாதம் 29ம் தேதி, இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கான, 'ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 நடந்தது. இத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இதுவரை, அரசு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தாமல் உள்ளது.பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் -2, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, பணி நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை துரிதமாக நடக்கிறது.

ஆனால், இடைநிலை ஆசிரியர் தகுதிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இப்பணிகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றும் வேதனையில் உள்ளனர்.இதுகுறித்து, தகவல் அறியும்உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கும், முறையாக விடை இல்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தொடக்கக்கல்வி இயக்ககம், காலிப்பணியிடங்களை தெரிவிக்கவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியமும், ஆசிரியர் தேர்வு வாரியமே இது குறித்து முடிவு செய்யும் என, தொடக்கக் கல்வி இயக்ககமும், மாறி மாறி தெரிவித்துள்ளதால், தேர்ச்சி பெற்றவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.குறிப்பிட்ட காரணங்கள் ஏதுமின்றி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன நடவடிக்கைகளை அரசு தாமதப்படுத்துகிறது என புகார் தெரிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கனகமணி கூறுகையில்,''பல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'கூடுதல் எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர். அதை ஒழுங்குபடுத்திய பின், சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள், அவ்வப்போது தொடர்ந்து அனுப்புகிறோம்,'' என்றார்.

No comments:

Post a Comment