www.asiriyar.net

Tuesday 19 December 2017

பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் டிபிஐயில் ஆர்ப்பாட்டம்

பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இனியும் காலம் கடத்தினால், தீவிர போராட்டம் நடத்துவோம் என்று பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது. 

பள்ளிக் கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை நுங்கம் பாக்கம் டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொருளாளர் சீனிவாசன் கூறியதாவது:  பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விருப்ப மாறுதல் வழங்க வேண்டும், விதிப்படி பதவி உயர்வு, பணிவரன் முறை வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். இது தவிர முன்தேதியிட்டு பணி வரன்முறை, நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக நெருக்கடிகளை நீக்குதல், உதவியாளர் பதவியில் நேரடியான நியமனத்தை ரத்து செய்வது, குறித்தும் கேட்டு வருகிறோம். 

அத்துடன் ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அரசும் எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. அதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதற்கு பிறகு எங்கள் கோரிக்கை நிறைவேற்றாமல் அரசு காலம் கடத்தி வந்தால் தீவிர போராட்டத்தை நடத்துவோம்.  இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார். 

No comments:

Post a Comment