www.asiriyar.net

Saturday 17 February 2018

விரைவில் 5ஜி நெட்வொர்க் சேவை!

5ஜி நெட்வொர்க் சேவைக்கான அரசின் செயல்திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

இதுபற்றி அசோசெம் கூட்டமைப்பு சார்பாக பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளரான அருணா சுந்தரராஜன், “இந்தியாவின் 5ஜி நெட்வொர்க் சேவை தொடர்பான அரசின் செயல் திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள் வெளியிடப்படும். சர்வதேச அளவில் 5ஜி சேவைக்கு இந்தியாவைத் தயார்படுத்தும் விதமாக அதிசிறந்த ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 5ஜி தொழில்நுட்ப சேவையை மக்களிடம் எடுத்துச் செல்வது, 5ஜி சேவைக்கான இலக்குகளை நிர்ணயிப்பது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கும்.

இதன்மூலம், 2020ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 5ஜி சேவை அமலாகும்போது இந்தியாவும் 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் சிறந்து விளங்கும். 5ஜி சேவையில் இயந்திர வழி தொலைத் தொடர்புக்காக புதிய எண் வரிசைகள் அறிமுகப்படுத்தப்படும். 5ஜி தொழில்நுட்பம் வாயிலாகக் கார்களில் சென்சார் உதவியுடன் விபத்துகளைத் தடுக்க முடியும்” என்றார். 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்காக ரூ.500 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment