www.asiriyar.net

Saturday 10 February 2018

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்து : ஆகஸ்ட்டில் மறுதேர்வு என அறிவிப்பு

முறைகேடு எதிரொலியாக, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட்டில் மறு தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், 2017 செப்., 16ல், எழுத்துத்தேர்வு நடந்தது; 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள், நவம்பர், 7ல் வெளியாகின. மதிப்பெண் தரவரிசைப்படி, ஒரு காலியிடத்துக்கு, இரண்டு பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளில், பெரும் குளறுபடி நடந்துள்ளதாக, சிலர் புகார் அளித்தனர். இதுகுறித்த விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது.

உடன், தேர்வு முடிவுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டன. உண்மையான மதிப்பெண்ணை அறிந்து கொள்ள, அனைத்து விடைத்தாள் நகல்களும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகலுக்கும், தேர்வு முடிவில் கூறப்பட்ட மதிப்பெண்ணுக்கும் வித்தியாசம் இருந்ததால், டி.ஆர்.பி.,க்கு, பலர் கடிதம் எழுதினர்.

அதில், விடைத்தாள் நகலை விட, தேர்வு மதிப்பெண் அதிகமாகியிருந்ததை சுட்டிக் காட்டினர். போலீசார் நடத்திய விசாரணையில், 'கால் டாக்சி' டிரைவர், தனியார் விடைத்தாள் மதிப்பீட்டு நிறுவன கணினி ஆபரேட்டர், நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் என, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், மூன்று பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டி.ஆர்.பி., ஊழல் புகார்களை விசாரிக்க, சீனிவாசன் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தனி இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவரது விசாரணையை தொடர்ந்து, பாலிடெக்னிக் தேர்வு, முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு, 2017 செப்., 16ல் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இந்த பணிக்கான தேர்வு, மீண்டும் ஆகஸ்ட்டில் நடத்தப்படும். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை, மே மாதம் வெளியிடப்படும்.ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள், மீண்டும் எழுத வேண்டும்; மீண்டும் விண்ணப்பிக்கவும் வேண்டும். ஆனால், தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment