www.asiriyar.net

Tuesday 6 February 2018

CPS : பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா?: டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை

தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (புதிய பென்சன் திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய கணக்கில் (சிபிஎப்) செலுத்தப்படும். இதே அளவு தொகையை அரசு தனது பங்காக சிபிஎப் கணக்கில் செலுத்தும். தற்போது சிபிஎப் தொகைக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது சிபிஎப் கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 60 சதவீதம் வழங்கப்படும். எஞ்சிய 40 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதில் கிடைக்கும் தொகை அவர்களுக்கு ஓய்வூதியமாக அளிக்கப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை அவர்களின் பணக்காலம், கடைசியாக வாங்கிவந்த சம்பளம் ஆகியவற்றைக்கொண்டு துல்லியமாக கணக்கிட்டுவிடலாம். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் அவ்வாறு கணக்கிட முடியாது. எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது தெரியாது. இதனால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார். இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 3 முறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வல்லுநர் குழுவின் தலைவரான சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி புதிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அதில், தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், சென்னை பொருளாதாரவியல் கல்வி நிறுவன பேராசிரியர் பிரிஜெஷ் சி.புரோஹித் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்த குழு கடந்த நவம்பர் இறுதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால், நவம்பர் 30-க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படாத நிலையில், அந்த குழுவுக்கு மேலும் ஒரு மாதம் (டிசம்பர்) காலஅவகாசம் அளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியங்களை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவுக்கு அடுத்தடுத்து காலநீட்டிப்பு அளிக்கப்பட்டு வருவது அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

வல்லுநர் குழுவின் காலநீட்டிப்பை கைவிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 21 முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவி்ததுள்ளது.

இந்த சூழலில் வல்லுநர் குழுவின் அறிக்கை தொடர்பாக அதன் தலைவரான டி.எஸ்.ஸ்ரீதரிடம் கேட்டபோது, "அறிக்கை தொடர்பான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்றார். .

No comments:

Post a Comment